சென்னை: சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாபலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த்து இல்லத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது அவருக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக இளைஞரணிச் செயலாளரும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின்,  தான் போட்டியிட்ட சேப்பாக்கம் -திருவல்லிகேணி தொகுதியில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்சாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தார்.

இதையடுத்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள  விஜயகாந்த் இல்லத்துக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் அவரை  நேரில் சந்தித்து நலம் விசாரித்ததுடன், தேர்தலில் பெற்ற வெற்றிக்காக வாழ்த்துக்களையும் உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக திமுக வெற்றி குறித்து விஜயகாந்த் தனது டிவிட்டரில், “சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன். தேர்தலில் உழைத்த அனைவருக்கும் மனதார நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழகத்தில் ஆட்சி அமைக்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் & வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.