சென்னை:
தொலைக்காட்சி விவாதங்களில் மிரட்டல் விடுக்கும் தொனியில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பாரதியஜனதாவை சேர்ந்த தலைவர்கள் நாகரிகமின்றி பேசி வருகிறார்கள்.
திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலர் சுப.வீரபாண்டியன் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போர் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினார். அதில் பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் அடாவடி பேச்சு குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
subavee
திராவிட இயக்க தமிழர் பேரவை அலுவலகத்தில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போரின் கலந்தாய்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக  கோபண்ணா, திமுகவின் சார்பாக பொள்ளாச்சி மா. உமா பதி, பரந்தாமன், திராவிடர் கழகத்தின் சார்பாக கலி பூங்குன்றன், அருள்மொழி உள்பட 14 பேர் பங்கேற்றனர்.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெறும்,  ஆர்.எஸ்.எஸ்.,  பாஜக பிரமுகர்கள், மற்றவர்களின்  பிற கருத்து களை சொல்லவிடாமல் தடுத்து,  மிரட்டல் தொனியில் விவாதங்களை திசை திருப்புவதாக  சுப.வீரபாண்டியன் உள்பட தலைவர்கள்  குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையடுத்து கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
இன்றைய கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் எழுத்தாளர்களுமாகிய நாங்கள் ஊடகங்களின் அழைப்பை ஏற்று பல்வேறு தொலைக்காட்சிகள் நடத்தும் சமூக, அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று எங்களின் பார்வைகளையும் கருத்துகளையும் பதிவு செய்து வருகிறோம்.
அந்த விவாதங்களில் பங்கேற்கும் ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர் பிறர் தம் கருத்துகளைச் சொல்லவிடாமல் தடுத்தும்,  நாகரிகமின்றியும், அடாவடித்தனமாகவும், மிரட்டல் தொனியிலும் விவாதத்தைத் திசை திருப்பும் போக்கில், உண்மைக்கு புறம்பான செய்திகளை முன்வைத்தும் பேசி வருகின்றனர்.
தொலைக்காட்சியில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் இப்போக்கினைத் தொலைக்காட்சியினர் முறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனநாயக முறைப்படி அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
அவ்வாறின்றி ஒருபக்கச் சார்பாகவே நடந்து கொள்வார்களெனில், அத்தகைய தொலைக்காட்சிகளின் விவாதங்களில் பங்கேற்பது குறித்து நாங்கள் பரிசீலனை செய்ய நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.