சென்னை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்தார்.

நேற்று அவருக்கு இருமல் மற்றும் சளி தொல்லை அதிகரித்துள்ளதன் காரணமாக மாலை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்ட பின்னர், உள்நோயாளி பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற அறிவுறுத்தினர்.

அந்த அறிவுரையின்படி விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இன்று இரவும் விஜயகாந்த் மருத்துவமனையில் தங்கி இருந்தே சிகிச்சை பெறுவார் எனக் கூறப்படுகிறது. அவர் சிகிச்சை முடிந்த பிறகு நாளை வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தேமுதிக கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.