சென்னை

ன்று அதிகாலை சென்னையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

தற்போது தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் அடிக்கிறது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் முதலே பெரும்பாலான இடங்களில் தினசரி 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர். தற்போது கத்திரி வெயில் காலமும் தொடங்கி விட்டதால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு மக்கள் வெளியே வருவதே இல்லை.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர். ஆய்னும் தலைநகர் சென்னையில் மழைக்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வழக்கதை விட அதிகமாக வீசி வந்தது.

சென்னையில் இன்று அதிகாலையில் 4.30 மணி அளவில் திடீரென மழை பெய்தது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. சென்னை சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர்,மீனம்பாக்கம் விமான நிலையம், அடையார், வேளச்சேரி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆயிரம் விளக்கு, நந்தனம் ஆகிய சென்னையின் உள் இடங்களில் நல்ல மழை பெய்தது.

இந்த மழை 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்தாலும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.  கடும் வெயிலால் வாடிய சென்னை வெப்பம் சற்று நேரம் பெய்த குளுகுளு மழையால் தணிந்துள்ளது.