சென்னை

லங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு சிறையில் உள்ள 23 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.

 

தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது அவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்து சிறையில் அடைப்பது கடந்த சில நாட்களாக நின்று இருந்தது.  ஆனால் தற்போது அது மீண்டும் தொடங்கி உள்ளது.   நேற்று நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து, 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 23 மீனவர்களை சிறைபிடித்தனர்.   அவர்களுடைய மூன்று படகுகளையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தி வைத்தனர்.  கைது செய்யப்பட்டிருந்த மீனவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிறுத்தப்பட்டனர்.

நீதிபதி வருகிற 28ஆம் தேதி வரை காரை நகர் கடற்படை முகாமில், மீனவர்களை தனிமைப்படுத்திக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள், மயிலட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் முதல்வர் ”இலங்கை – இந்தியா மீனவர்கள் இடையேயான நீண்ட கால பிரச்சினையில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். சிறையில் உள்ள 23 மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இலங்கை அதிகாரிகளிடம் இந்திய வெளியுறவுத் துறை வலியுறுத்த வேண்டும்.  அப்பாவி மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது ஆழ்ந்த கவலை ஏற்படுத்துகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.