சென்னை

மிக்ஜம் புயல் இடைக்கால நிவாரணமாக ரூ.5000 கோடி அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாகக் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.

தமிழகத்தில் ‘மிக்ஜம்’ புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் (5-12-2023) அன்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாக்க குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு. இடைக்கால நிவாரணமாகக் குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ‘மிக்ஜம்’ புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது என்றும். முழு விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர், சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார்”

எனக் கூறப்பட்டுள்ளது.