சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மிக்ஜம் புயல் காரணமாகச் சென்னையில் கனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.  பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கனமழை ஓய்ந்துள்ள நிலையில், மாநகரில் ஒரு சில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.

சென்னை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.  பல்வேறு அமைப்பினர் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்கள். புயல் பாதிப்பு குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.

தமிழக முதல்வர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூகவலைத்தளத்தில்,

“தங்களது ஆதரவை மிகுந்த மதிப்புடையதாகக் கருதுகிறேன் தோழர் பினராயி விஜயன் அவர்களே. தொடர்பு கொண்டு விசாரித்தமைக்கு நன்றி. சென்னை சீரான வேகத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. கேரள மக்களின் சார்பாக நீங்கள் வெளிப்படுத்திய உண்மையான அக்கறை எங்களது நெஞ்சங்களுக்கு இதமாக அமைந்துள்ளது. ஒன்றிணைந்து இந்தச் சவாலில் இருந்து மீள்வோம்,” 

என்று நன்றி தெரிவித்துள்ளார்.