மராவதி

திருப்பதி பகுதியை ஸ்ரீ பாலாஜி மாவட்டம் என்னும் பெயரில் தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து ஆந்திரா தனியாகப் பிரிந்த போது கர்னூல் தலைநகரமாக அமைக்கப் பட்டது. மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடக எல்லையில் உள்ள சில பகுதிகள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன.  அத்துடன் இங்கு இணைய மாட்டோம் என அடம் பிடித்த தெலங்கானாவும் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. கடந்த 1956இல் 294 தொகுதிகளுடன் தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உருவானது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி ஆந்திர பிரதேசத்தில் இருந்து தனி தெலங்கானா மாநிலம் உருவானது. தலைநகர் ஹைதராபாத்துடன் தெலங்கானா பிரிக்கப்பட்டதால், ஆந்திராவுக்கு புதிய தலைநகரமாக அமராவதி நகரம் அறிவிக்கப்பட்டது.

தற்போது ஆந்திராவில் 13 மாவட்டங்கள் உள்ளன. மக்களவைத் தொகுதிகளின் அடிப் படையில்  26 மாவட்டங்களாக உருவாக்க ஜெகன் மோகன் தலைமையிலான அரசு முடிவு செய்தது.   அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு புதிய மாவட்டங்கள் மற்றும் அவற்றின் எல்லைகள் தொடர்பான அறிவிப்பை ஆந்திர அரசு நேற்று வெளியிட்டது.

இனி ஆந்திராவில், ஸ்ரீகாகுளம், மன்யம் , விஜயநகரம், அல்லூரி சீதாராம ராஜு, விசாகப்பட்டினம், அனகாபள்ளி, காக்கிநாடா, கோனசீமா, ராஜ மகேந்திர வரம், பீமவரம், ஏலூரு, கிருஷ்ணா, விஜயவாடா, குண்டூர், பல்நாடு, பாபட்லா, நெல்லூர், கர்னூல், நந்தியாலா, அனந்தபுரம், புட்டபர்த்தி, கடப்பா, ராயசோட்டி, சித்தூர், திருப்பதி (ஸ்ரீ பாலாஜி) என மொத்தம் 26 மாவட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்.

இதில் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாகத் திருப்பதி உதயமாகிறது.  இந்த மாவட்டத்துக்கு ஸ்ரீ பாலாஜி மாவட்டம் என பெருமாளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் திருப்பதி, சந்திரகிரி, காளஹஸ்தி, வெங்கடகிரி, சூளுர் பேட்டை, நாயுடு பேட்டை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற உள்ளன.