திருப்பதி
வரும் பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்ய நாளை முதல் சிறப்புத் தரிசன டிக்கட் இணையத்தில் வெளியாகிறது.
கொரோனா பரவல் காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குத் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு மற்றும் இலவச தரிசனத்துக்கான டிக்கட்டுகள் இணையம் மூலம் மட்டுமே அளிக்கப்படுகிறது. டிக்கட் இல்லாதோர் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் பிப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கட்டுகள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் வீதம் என 28-ந் தேதி (நாளை) காலை 9 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.
மேலும் இலவச தரிசனத்துக்காகத் தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் 29ம் தேதி காலை 9 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட உள்ளது. பக்தர்கள் பிப்ரவரி மாதத்துக்கான டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.