திருநெல்வேலி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி ரயில் நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியதால் அதி கனமழை பெய்தது.  இந்த கனமழை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. வெள்ளம் தற்போது வடிந்தாலும் மக்கள் பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீளவில்லை.

திருநெல்வேலி ரயில் நிலையத்தை சுற்றி முழுவதுமாக வெள்ளநீர் சூழ்ந்தது. எனவே இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது வெள்ளநீர் வடிந்ததால் திருநெல்வேலி ரயில் நிலையம் இன்று மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட சில ரயில் சேவைகளைத் தவிர மற்ற ரயில் போக்குவரத்து படிப்படியாக இன்று முதல் தொடங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.