திருச்செந்தூர்: மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க அரோகரா கோஷத்துடன்  திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு திருத்தேரினை வடம்பிடித்து இழுத்து வந்து எம்பெருமான் முருகனை  வணங்கி தரிசித்து வகின்றனர்.

.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 14ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவினையொட்டி, தினசரி காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஏற்கனவே நடைபெற்ற  ஏழாம் நாள் திருவிழா மற்றும் எட்டாம் நாள் திருவிழாவில் மட்டுமே பிரதான உற்சவர் சண்முகக் கடவுளின் தரிசனம் பக்தர்களுக்கு கிடைத்தது.  ஏழாம் திருவிழா அன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் 5.00 மணிக்குள் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் அருள்பாலித்தார்.  அன்றைய தினம் மாலை நான்கு மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிவபெருமானும் தானும் ஒருவரே என்பதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில் முருகப்பெருமான் இவ்வாறு காட்சி அளித்தார்.

எட்டாம் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமையன்று காலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தியில் சண்முகர் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். படைக்கும் தொழிலைப் புரிகின்ற பிரம்மாவும் நானே என்பதை உணர்த்தும் விதத்தில் இவ்வாறு வலம் வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சண்முகரை அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் எழுந்தருளினார்.  காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலும் நானே” என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்சி தருகிறார். பச்சை சாத்தியில் வருகின்ற முருகப்பெருமானை லட்சக் கணக்காண பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்து தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர்.

நேற்று 9ஆம் திருநாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான  10ஆம் நாள் திருவிழா இன்று நடைபெற்று வருகிறது.  இன்று காலை 7 மணியளவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. முதலில் விநாயகர் தேர், 2வது சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளும் பெரிய தேர், 3வது தெய்வானை அம்பாள் எழுந்தருளும் தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக நான்கு வெளி வீதிகளில் பவனி வந்ததை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  அலைகடலென திரண்டு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

நாளைய தினம் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர்.