திருவண்ணாமலை: பிரசித்திப்பெற்ற அண்ணாமலையார் கோவிலில்  ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று இரவு தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

பஞ்ச பூதங்கள் என்று சொல்லக்கூடிய நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் ஆகிய இந்த பஞ்சபூதங்களில் நெருப்பிற்கான ஸ்தலம் திருவண்ணாமலை. விஷ்ணுபகவானுக்கும், பிரம்மாவுக்கும் ஜோதிவடிவாக காட்சி கொடுத்த ஸ்தலமே திருவண்ணாமலையாகும். இத்தலம் தென்கயிலாயம், சோணமலை, சிவலோக நகர், முத்தி நகர், அண்ணாமலை, அருணாசலம் எனப் பலவாறாக போற்றப்படுகிறது. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. சமயக்குரவர் நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இங்கு மலையே இறைவனின் சொரூபம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்  கார்த்திகை தீபத்திருவிழா உலக பிரசித்திபெற்றது, சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. . 12 நாட்கள் நடைபெறும்  இந்த தீபத் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்தாவது நாளன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும். இதனைக் காண திருவண்ணாமலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொள்வார்கள். தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்த ஆமண்டு கார்த்திகை தீபத் திருவிழாவானது இன்று அண்ணாமலையார் கோவில் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் இன்று இரவு கார்த்திகை தீப திருவிழா தொடங்குகிறது.  நாளை இரவு பிடாரி அம்மன் உற்சவம், நாளை மறுநாள் விநாயகர் உற்சவம் நடைபெறும். இதையடுத்து, அண்ணாமலையார் கோவில் மூவர் சன்னிதானத்தில் முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் 20ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. அதன் பிறகு 10 நாள் உற்சவம் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து,  3.12.2020 அன்று சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது. வரும் 20ம் தேதியன்று கொடியேற்றப்படும். அதனை தொடர்ந்து 10-ம் நாள் 29.11.2020 அன்று கோவில் வளாகத்தினுள் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாடவீதியில் மாட வீதியில் சுவாமி வீதிஉலா, தேரோட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள ஐந்து பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி வர உள்ளனர். முக்கியமான பரணி தீபம் மற்றும் மகா தீபம் 29 ம் தேதி ஏற்றப்பட உள்ளது.
இந்த நிலையில்  கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருநாளன்று கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் தீபத் திருவிழாவின் பரணி தீபம் மற்றும் மகாதீபம் நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன.
தீபத்திருவிழாவின் போது 29ம் தேதி நடைபெறும் தீபத் திருநாள் தவிர, நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை தினந்தோறும் சுமார் 5000 பக்தர்களுக்கு சவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.