பழனி: நிலத்தகராறு காரணமாக, பழனியில் துப்பாக்கி சூடு நடத்திய தியேட்டர் அதிபர்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.  அவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் காயமடைந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன்.  இவருக்கு  சொந்தமாக பழநி அப்பர் தெருவில் 12 சென்ட் காலி இடம் உள்ளது. இந்த இடத்திற்கு அருகே தியேட்டர் அதிபரான  நடராஜன் (வயது 80) என்பவர் வசித்து வருகிறார். இளங்கோவன் இடத்தில் தனக்குச் சொந்தமான நிலமும் இருப்பதாக தொழிலதிபர் நடராஜன் தெரிவித்து வந்துள்ளார்.  இது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில்,   இளங்கோவன் தன்னுடைய இடத்தில் வேலி அமைக்கச் சென்றபோது, தொழிலதிபர் நடராஜன்  எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளார். இதையடுத்து, இளங்கோவனின் உறவினர்களான பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணி ஆகிய இருவரும் நடராஜனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.  பேச்சுவார்த்தை விவகாரமாக மாறிய நிலையில்,  ஆவேசமடைந்த நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டதாகத் தெரிகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த இளங்கோவன் தப்பியோடிய நிலையில், அவருக்கு ஆதரவாக பேசவந்த  சுப்பிரமணி வயிற்றிலும், பழனிச்சாமி இடுப்பிலும் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர்.

துப்பாக்கியால் சுட்டுவிட்டு தொழிலதிபர் நடராஜன் தப்பியோடிவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் பழநி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற இளங்கோவன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்த வந்த பழநி டிஎஸ்பி சிவா தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய நடராஜனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நடராஜன் வைத்திருந்த கைத்துப்பாக்கி அவருக்குச் சொந்தமானது என்பதும், அந்த துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதாகவும்  இருப்பதாகவும்,  அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிராக்களை போலீஸார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரில் வயிற்றில் குண்டு பாய்ந்துள்ள பழனிச்சாமியை கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக தியேட்டர் அதிபர்  நடராஜன்  மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து சினிமா தியேட்டர் உரிமையாளர் நடராஜனை (வயது 80) போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.