அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில், பண்பொழி

வரலாற்றுச் சிறப்பு

பூவன் பட்டர் என்ற திருமலைக்காளி கோயில் பூசாரியின் கனவில் திருமலைமுருகன் தோன்றி, தான் அச்சன் கோயிலுக்குச் செல்லும் வழியில் கோட்டைத்திரடு என்ற இடத்தில் மூங்கில் புதருக்குள் இருப்பதாகவும், தான் இருக்கும் இடத்தைக் கட்டெறும்பு ஊர்ந்து சென்று காட்டும் என்றும் கூறினார்.இது பந்தள மகாராஜாவிற்குத் தெரிவிக்கப்பட்டது.

சேரமன்னரான பந்தளமகாராஜாவும், பூவன்பட்டரும் கோட்டைத்திரட்டிற்கு வந்து கட்டெறும்பு ஊர்ந்து சென்று வழிபட்ட மூங்கில் புதருக்குள்ளிருந்த முருகப்பெருமானை எடுத்தனர். அவர்கள் முருகப்பெருமானைக்கொண்டு வந்து குன்றின் உச்சியில் ஸ்தாபகம் செய்தனர். முருகப்பெருமான் குன்றின் மீது எழுந்தருளி பாலசுப்பிரமணியனாக காட்சி தருகிறார்.

தனிச்சிறப்பு

அருணகிரிப் பெருமான், கவிராசப்பண்டாரத்தையா, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் இப்பெருமானைப் பாடிப்பரவியுள்ளார். அகத்தியர், கற்புக்கரசி கண்ணகி, சப்தகன்னியர், இம்முருகனை வழிபட்டு வந்துள்ளனர்.

பந்தளமஹாராஜா,சொக்கம்பட்டி குறுநில மன்னர் சிவனணைஞ்சாத்தேவர்,பூவாத்தாள்.சுவகாமி பரதேசியார் போன்ற அருளாளர்கள் இக்கோயில் வளர்ச்சிக்கு உறுதுணை செய்துள்ளார்கள். சுவகாமி பரதேசியார் நன்செய்,புன்செய் நிலங்களை யும்,தோப்புகளையும் இம்முருகப் பெருமானுக்குத் தானமாக வழங்கியுள்ளார். மேற்குத்தொடர்ச்சி மலைச்சரிவில் “ஓம்” என்ற வடிவம் கொண்ட உயர்ந்த குன்றில் நானூறு அடி உயரத்திற்கு மேல் இக்கோயில் உள்ளது.

இத்திருத்தலத்தின் தீர்த்தமான பூஞ்சுனை,அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது.நாள்தோறும் ஒரு தாமரை மலர் இச்சுனையில் மலரும்.அதை இந்திராதி தேவர்களும் சப்த கன்னியர்களும் பறித்து முருகனுக்குச் சூட்டி வழிபட்டு வந்த அற்புத தீர்த்தமாகும்.

இம்முருகப்பெருமானுக்கு நாள்தோறும் எட்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

போக்குவரத்து வசதி

செங்கோட்டையிலிருந்து வடமேற்கில் 10 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் வடமேற்குத் திசையில் இருக்கின்றது. தென்காசி மற்றும் செங்கோட்டையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. 2012 ஆம் ஆண்டு முதல் மலை மேல் வாகனங்கள் சென்று வர தார்ச் சாலையாக மலைப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

தங்குமிடம்

தென்காசி,குற்றாலம்,செங்கோட்டையில் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.