சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8-ஆம் தேதி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணையில் 142அடி வரை தண்ணீர் தேக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 136 அடியிலேயே கேரள அரசு தண்ணீர் திறந்து விட்டது சர்ச்சையானது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கமல், கேரள அரசுக்கு ஆதரவான நிலையிலேயே அறிவிப்பு வெளியிட்டது. இது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழகஅரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் உள்பட கம்யூனிஸ்டு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை; “முல்லைப் பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர், தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர்மட்டம் 136 அடி இருக்கும்போதே, கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீரை திறந்துவிட்டுள்ளது. அணையில் 142 அடி வரை நீரை தேக்கிவைக்காதது ஏன் என பலமுறை கேட்டும், தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

எனவே, தமிழகஅரசின் நடவடிக்கையை கண்டித்து,  முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நவம்பர் 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்று அறிவித்தார்.

மேலும்,  தமிழகத்தில் 100 நாள்வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.246.13 கோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. ஆனால், 100 நாள்வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மத்திய அரசு போதுமான நிதிஒதுக்கவில்லை என தமிழக அரசு கூறுகிறது. இது முற்றிலும் தவறானது என்று கூறியதுடன்,  இந்தியாவிலேயே அதிகமாக கடன் உள்ள மாநிலமாக தமிழகம் மாறப் போகிறது. நிதிநிலை கவலைக்கிடமாக இருப்பதால், இதுகுறித்து முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்” எனவும் அறிவுறுத்தினார்.

முல்லை பெரியாறு அணையை இபிஎஸ்ஓபிஎஸ் பார்த்தார்களா? புதிய அணை தேவையில்லை! துரைமுருகன்