சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா பொதுமுடக்கம் வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால்,   கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் வரும் 26ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நவம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல, தற்போதுள்ள கொரோனா தளர்வுகள் கூடிய ஊரடங்கு 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளது.

இது குறித்து அரசு அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, நலவாழ்வுத்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை உள்ளிட்டவற்றின் செயலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை நவம்பர் முதல் திறக்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. மேலும்,  தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்தும், தீபாவளியையொட்டிப் பொது இடங்களில் கூட்டத்தைத் தவிர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தீபாவளியை முன்னிட்டு, திரையரங்குகளில் 100 சதவீத  இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வாய்ப்புள்ளதாகவும், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடத்துவதற்கான தளர்வுகள் அளிக்க  வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது