நெல்லை:
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனது மகளின் காதலனை திருமணம் குறித்து பேச வருமாறு வீட்டிற்கு வரவழைத்து அவரை வெட்டி கொலை செய்த தந்தை, காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகுருநாதன் - லட்சுமண பெருமாள்
சிவகுருநாதன் – லட்சுமண பெருமாள்

திருநெல்வேலி  மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள தேவர் குளம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமண பெருமாள். இவரது மகள் கஸ்தூரி. இவர்,  நர்சிங் படிப்பு முடித்துவிட்டு திண்டுகல்லில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கஸ்தூரியும், திண்டுக்கல் மாவட்டம் நெய்காரப்பட்டியை சேர்ந்த சிவகுருநாதன் என்கிற இளைஞரும் காதல் வயப்பட்டுள்ளனர்.
தனது மகள் கஸ்தூரி வேறு சாதியை சார்ந்த சிவகுருநாதனை காதலித்ததில் கஸ்தூரியின் தந்தையான லட்சுமணனுக்கு  உடன்பாடில்லை.  ஆனாலும் சிவகுருநாதனை திருமணம் செய்துவைப்பதாக தனது மகள் கஸ்தூரியிடம் சொல்லியிருக்கிறார். மேலும், சிவகுருநாதனை தனது வீட்டிற்கு லட்சுமனன் அழைத்துள்ளார். இதையடுத்து சிவகுருநாதனும் வந்திருக்கிறார்.
அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு சிவகுருநாதனை சரமாரியாக வெட்டியுள்ளார் லட்சுமணபெருமாள். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சிவகுருநாதன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிறகு லட்சுமணன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
சிவகுருநாதனின் உடல் இன்று மதியம்  பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
சாதி காரணமாக நடத்தப்பட்ட இந்த ஆணவக்கொலை, நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.