சென்னை:
மிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிகிறது.
ஆகவே நாளை முதல் உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இன்று அதற்கான அரசு ஆணை வெளியாகும் என தெரிகிறது. நாளை முதல் தனி அதிகாரிகள், உள்ளாட்சி நிர்வாகங்களின் பொறுப்புகளை ஏற்க உள்ளனர்.
chennai0803_01
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம்  கடந்த செப்டம்பர் 25ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று  அறிவித்தது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு சரியான முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று திமுக தொடர்ந்த வழக்கால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான  அறிவிப்பாணை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
ஆனால், இதை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம்  மேல்முறையீடு செய்தது. ஆனால், வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் தடை மேலும்  4 வாரங்களுக்கு நீட்டித்து  உத்தரவிட்டது.
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 12,524 ஊராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில், 1,18,974 ஊரக உள்ளாட்சி மற்றும் 12,820 நகர்புற உள்ளாட்சி பதவிகள் என மொத்தம் 1,31,794 பதவிகள் உள்ளன.
இந்த பதவிகளுக்கு கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்று கொண்டனர். அவர்களின் ஐந்தாண்டு பதவி காலம் அக்டோபர் 24ம் தேதியுடன்  (இன்றுடன்) முடிகிறது.
 
எனவே, உள்ளாட்சி நிர்வாகங்களின் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதை தவிர்க்க தனி அதிகாரியை நியமித்து உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க வேண்டும்.
tn-logo
தலைமை செயலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற  தமிழக அமைச்சரவை கூட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் ஊராட்சி மற்றும் நகராட்சி சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அவசர சட்டம் பிறப்பித்தார்.
இந்த அவசர சட்டம் கடந்த 17ம் தேதியிட்ட தமிழக அரசிதழில் வெளியிடப் பட்டது
இந்தநிலையில், மக்கள் பிரநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிவடை கிறது. எனவே, இன்று மாலைக்குள் தனி அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்படும் என்று தெரிகிறது.
இவ்வாறு, நியமிக்கப்படும் தனி அதிகாரிகள் நாளை முதல் உள்ளாட்சி நிர்வாக பொறுப்பை ஏற்க உள்ளனர்.
இதன்படி, சென்னை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்கு அந்தந்த மாநகராட்சி கமிஷனர், 124 நகராட்சிகளும் அந்தந்த நகராட்சி கமிஷனர், 528 பேரூராட்சிகள் செயல் அலுவலர் (இஓ), 388 ஊராட்சி ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், 31 மாவட்ட ஊராட்சிகள் அந்தந்த மாவட்ட ஊராட்சி செயலர், 12,524 கிராம ஊராட்சிகள் அரசால் நியமிக்கப்படும் திட்ட அலுவலர்கள் ஆகியோர் நிர்வகிப்பார்கள்.
இவ்வாறு, தனி அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு நாளையில் இருந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நடைபெறும் பணிகள் மற்றும் வளர்ச்சி  திட்டங்கள் அனைத்தும் அரசு அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும்.
இவர்கள் டிசம்பர் 31ம் தேதி வரை அல்லது தேர்தல் நடைபெறும் நாள் வரை பதவியில் இருப்பார்கள். ஐகோர்ட் உத்தரவின் பேரில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், 20 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி அமைப்புகள் தனி அதிகாரிகளின் கீழ் செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக,  உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால் போன், கார் உள்ளிட்டவற்றை இன்று மாலைக்குள் திரும்பி ஒப்படைக்க உத்தரவிடப் பட்டு உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த தலைவர்கள், உறுப்பினர்கள் வரும் வரை யாரும் நுழையாத வகையில் அவர்களது அறைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்படும் என தெரிகிறது