சென்னை: வங்கிப் படிவங்கள் ஏடிஎம்கள்,  போன்றவற்றில் தமிழ் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து வங்கியாளர்களையும் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக வங்கியாளர்களிடமிருந்தும் ஆலோசனைகள் கோரும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில வங்கியாளர் குழுவினருடன் மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார். 24ந்தேதி  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  2022-23 ஆண்டின் பட்ஜெட்டிற்காகவும் பரிந்துரைகள் பெறப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர், நிதித்துறை கூடுதல் செயலாளர் என்.முருகானந்தம், ஐஓபியின் தலைமைச் செயல் அதிகாரியும், எஸ்எல்பிசி தமிழ்நாடு தலைவருமான பார்த்த பிரதீம் சென்குப்தா, ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு நிதி அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் தலைமையில் நேற்று  (24-01-2022) தலைமைச் செயலகத்தில் மாநில வங்கியாளர் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, நிதி அமைச்சர் அனைத்து வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள், படிவங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வங்கியின் உதவி மையங்கள் மற்றும் பொது மக்களுடன் தொடர்பில் இருக்கும் அலுவலர்கள் தமிழ் நன்கு அறிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  அதைத்தொடர்ந்து, பல்வேறு அரசுத் திட்டங்களில் வங்கிகளின் செயல்பாடு குறித்து நிதி அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னுரிமைத் துறைகளுக்குக் கடன் வழங்கும் திட்டங்களை முனைப்பாகச் செயல்படுத்த வேண்டும் வங்கியாளர்களை கேட்டுக்கொண்ட அமைச்சர்,  அடுத்ததாக வங்கிகள் முன்னுரிமைத் துறை கடன் திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும், அதைவிட முக்கியமாக ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், தொலைதூரப் பகுதிகளுக்கு, குறிப்பாக பழங்குடியினரின் குடியிருப்புகளுக்கு வங்கிகளின் வசதிகளை வழங்க வங்கிகளை அமைச்சர் வலியுறுத்தினார்.க

முதல் முறையாக, வரும் 2022-23 ஆம் நிதியாண்டின் தமிழக நிதிநிலை அறிக்கைக்காக வங்கியாளர்களுடன் கலந்தாலோசித்து, பரிந்துரைகள் பெறப்பட்டன” என்று அதில் கூறப்பட்டுள்ளது