சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ள முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழ்நாட்டை பார்த்தால் பிபி ஏறத்தான் செய்யும் என கூறியுள்ளார்.

மதத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய முயல்பவர்களுக்கு, பிளவுபடுத்தும் முயற்சியை எதிர்கொண்டு தமிழ்நாடு மாநில மக்கள் எப்படி ஒற்றுமையாக நிற்கிறார்கள் என்பதைப் பார்த்து அவர்களின் ரத்தக்கொதிப்பு (பி.பி) எகிறத்தான் செய்யும் என்று  சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள   வீடியோவில், வணக்கம் எல்லாரும் நல்லா இருக்கீங்களா? திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆயிற்று. திமுக ஆட்சி அமைந்தால் என்னவெல்லாம் செய்வோம்னு வாக்குறுதி அளித்தோமோ, அதில் பெரும்பாலான வாக்குறுதிகளை இந்த 8 மாதத்தில் நிறைவேற்றி விட்டோம். நம் ஆட்சியை வழி நடத்துவது திராவிட மாடல் சிந்தனை. அதென்ன திராவிட மாடல் சிந்தனை? அப்படி கேட்பவர்களுக்கு என்னுடைய பதில், சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி. புரியும்படியாக சொல்ல வேண்டுமானால் வாய்ப்புகளும் வளங்களும் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா வரம்பு மக்களுக்கும் எல்லா மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கும் சரிசமமாக போய் சேர வேண்டும்.

இதில் எந்த ஜாதி, மத, வர்க்க, பாலின வேறுபாடும் இருக்கக் கூடாது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அங்கிருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் போய் சேருவதற்கு பதிலாக அங்கு வாழும் எல்லா மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி. அது தான் திராவிட சிந்தனை. நாங்கள் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டங்களும் இந்த சிந்தனையின் அடிப்படையில்தான் உருவாக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பாலுக்கு ரூ 3 விலை குறைத்தோம். பெண்களுடைய சமூக உரிமையையும் வாய்ப்புகளையும் அதிகரிக்க பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் கொண்டு வந்தோம். தமிழகத்தின் அரசு பணிகளில் தமிழருக்குத்தான் முன்னுரிமை என அரசாணை போட்டதால் நம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளோம்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை கொண்டு வந்தோம். சமூக நீதி என்றால் தமிழகம்தான் என்பதை இந்தியாவுக்கே காட்டினோம். பட்டியலின, பழங்குடியின மக்களோட கல்விக்கும் முன்னேற்றத்திற்கும் சிறப்பு திட்டங்களை கொண்டு வந்தோம். இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் என மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி அரசாங்கத்தின் அணுகுமுறையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்தோம். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என காலம் காலமாக சொல்லப்பட்ட பொய்யை இன்னிக்கு சுக்குநூறாக உடைத்திருக்கிறோம். உதாரணத்திற்கு இந்த திமுக ஆட்சியில் தான் ஆக்கிரமிப்பில் இருந்த 1789 கோடி ரூபாய் மதிப்பிலான 180 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டோம். தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் கோயில் சீரமைப்பிற்காக ரூ 1000 கோடி நிதியை ஒதுக்க ஆரம்பித்துள்ளோம்.

ஆனால் மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு தமிழகத்தை பார்த்தால் பிபி (ரத்த கொதிப்பு) ஏறத்தான் செய்யும். என்னடா, நாமளும் என்னென்னவோ செய்து பார்க்கிறோம், அந்த மக்களோட ஒற்றுமையை ஒன்றுமே செய்ய முடியலைனு வெறுப்பு இருக்கத்தான் செய்யும். சமூக நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டும் நமது முயற்சிகளுக்கு எதிராக பல விதமான சவால்களை முன் வைக்கிறது நமது ஒன்றிய அரசு.

அதற்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் சிக்கலான இந்த கொரோனா சமயத்தில் கூட நமக்கு வரவேண்டிய ரூ 16,725 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை தராமல் இழுத்தடிக் கிறார்கள். தேசிய மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நமக்கு வர வேண்டிய கொரோனா நிவாரண நிதியான ரூ8989 கோடியும் நமக்கு தரப்படவில்லை. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை எடுத்துக்கோங்க! கொரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த சலுகைகளும் உதவிகளும் இல்லை.

இந்த பட்ஜெட்டில் முக்கியமான முன்னெடுப்பா, வைரத்திற்கு வரியை குறைத்திருக்கிறார்கள். இதை கேட்டு அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை குறைத்து அந்த திட்டத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டார்கள். இந்த ஆதிக்க அணுகுமுறையோட நீட்சிதான் நீட் தேர்வு. நிறைய செலவு செய்து பயிற்சி வகுப்புகளுக்கு செல்வோருக்குத்தான் நீட் மூலம் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது.

இதனால் வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டது. இது எவ்ளோ பெரிய சமூக அநீதி? இந்த அநீதியை எதிர்த்துதான் நம் சட்டசபையில் நீட் வேண்டாம் என சட்டத்திருத்தம் செய்தோம். அந்த சட்டமுன்வரைவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால், அதை ஆளுநர் நமக்கே திருப்பி அனுப்புகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கொண்டு வர சட்டத்தை தடுக்க நினைக்கிறது ஜனநாயக படுகொலைதானே? ஆனால் முந்தைய ஆட்சி மாதிரி இல்லாமல் நாம் இந்த அநீதிக்கெல்லாம் துணை போக மாட்டோம். ஒரு போதும் நமது உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம். ஒவ்வொரு சவாலையும் போராடி வெல்வோம்.

நாமெல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறோம். இனிமேலும் ஒன்றாகத்தான் இருப்போம் என்பதை இந்த உள்ளாட்சி தேர்தலோட முடிவு அவர்களுக்கு காட்டட்டும். மாநில உரிமைக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் உள்ளாட்சியிலும் நம்ம ஆட்சி தொடரட்டும். உதயசூரியனுக்கும் மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் சின்னங்களுக்கும் வாக்களிக்குமாறு உங்களை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். என்றென்றும் உங்களுடன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.