சென்னை: டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் புதிய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தங்கரை சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டுநாள் பயணமாக  நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் தனி செயலாளர் உதயசந்திரன் , உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சென்றுள்ளனர்.   தொடர்ந்து,  இன்று காலை 10:30 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு  வாழ்த்து கூறினார்.  குடியரசு துணை தலைவரை  சந்தித்தபோது முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் ஹோம் ஆப் செஸ் என்ற புத்தகத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்.

அதைத்தொடர்ந்து ராஷ்டிரபதி பவனில்  குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்பட சிலர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பேசினோம், இந்த சந்திப்பு மனநிறைவாகவும், மகிச்சிகரமாகவும் இருந்தது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்கு அழைத்தும் என்னால் வர முடியாத சூழல் இருந்தது.

இன்று மாலை 4.30 மணிக்கு அவருக்கு (பிரதமர், அவர் செஸ் ஒலிம்பியாடில் கலந்துகொண்டதற்கு) நன்றி தெரிவிக்க நேரில் வந்தேன். அவரிடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்படும். நீட் தேர்வில் விலக்கு, என்.இ.பி., மின்சாரம், காவிரி, மேகதாது அணை போன்ற பல கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், அரசியலுக்காக கேட்கப்படும் கேள்விகளுக்கு இந்த நேரத்தில் பதில் அளிக்க விரும்பவில்லை என மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்தா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்