சென்னை:
முழு ஊரடங்கை பயன்படுத்தி சில கருப்பாடுகள் செயற்கையாக விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி உள்ளன என்று வணிகர் சங்கம் கூறியுள்ளது.

நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள் இயங்கலாம். பால் வினியோகம், குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை வினியோகம். இதை தவிர்த்து பிற கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று கடை வீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது. காய்கறி கடைகள், மளிகை கடைகளில் மக்கள் கூட்டமாக கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

இக்கட்டான சூழலை பயன்படுத்தி வியாபாரிகள் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது மக்களை சுரண்டும் செயலை செய்யும் வியாபாரிகளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்கு துரோகம் செய்யும் கருங்காலிகளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டனத்தை தெரிவித்துள்ளது மேலும் அதிக விலைக்கு விற்பவர்களை வணிகம் செய்யும் நிலையிலிருந்து நீக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என வணிகர் சங்க பேரவைப்பு எச்சரித்துள்ளது.