மதுரை: உலகிலேயே தமிழ்தான் பழமையான மொழி – தமிழக கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றும், அதற்காக ஆன்மிக ஆர்வலர்களை கொண்ட குழுவை தமிழகஅரசு அமைக்கவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் பசுபதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழ் சைவ ஆகம விதிப்படி நடத்த உத்தரவிடக்கோரி, பொன்னுசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என். கிருபாகரன், பி. புகழேந்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் நேற்று (செப். 10) நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது,

“உலகிலேயே தமிழ் தான் பழமையான மொழி என்பதற்கு ஏராளமான ஆவணங்களும் ஆதாரங்களும் உள்ளன. குறிப்பாக, கொடுமணல், சிவகளை, கீழடி மற்றும் அழகன் குளம் ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் இதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. பானைகளில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக்கள் கிறிஸ்து பிறப்புக்கு 450 ஆண்டுகளுக்கு முந்தையது. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் தமிழ் கல்வெட்டுகளே அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை மற்ற மொழிகளை விட பழமையானவை. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் முறையாக பாதுகாக்கப்படாததால் ஏராளமான கல்வெட்டுகள் சேதமடைந்த உள்ளன.

தெய்வங்கள் உள்ளூர் மொழிகளை புரிந்து கொள்ளாது என்று கூறமுடியாது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஏராளமான பக்தி இலக்கியங்களை படைத்துள்ளனர். அப்பர், சுந்தரர், சம்பந்தர், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பக்தி இயக்கங்களை தமிழ்நாட்டில் வளர்த்துள்ளனர். இவர்கள் தமிழில் ஏராளமான பாடல்களை சிவனைப் போற்றி பாடியுள்ளனர். மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் 12 நாயன்மார்களும் ஏராளமான சிவாலயங்களை கட்டியுள்ளனர். 12 ஆழ்வார்களால் பெருமாளுக்கு 108 திவ்யதேசங்கள் அருளப்பட்டன. அப்படியிருக்கும்போது தமிழில் குடமுழுக்கு நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது.

எனவே, அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருணகிரிநாதர், பட்டினத்தார் மற்றும் சித்தர்கள் பலரால் இயற்றப்பட்ட பழமையான துதிப்பாடல்களை கண்டறிந்து தொழுதிடும் வகையில், தமிழ் அறிஞர்கள், ஆன்மிக ஆர்வலர்களை கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இக்குழு நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும்.

கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான முடிவை அரசு மேற்கொள்ள வேண்டும். கரூர் பசுபதீஸ்வரர் கோயில்  மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள  ஒட்டுமொத்த கோயில்களுக்கும் இது பொருந்தும்.

இவ்வாறு கூறியுள்ளனர்.

+++++++++++++++

“தமிழே உலகின் பழமையான மொழி என்பதற்கு அறிவியல்பூர்வ ஆதாரங்கள் உண்டு”: தீர்ப்பில் குறிப்பிட்ட ஐகோர்ட் கிளை!

“உலகிலேயே தமிழ்தான் பழமையான மொழி என்பதற்கு அறிவியல் பூர்வமாகவும் ஏராளமான ஆவணங்களும் ஆதாரங்களும் உள்ளன.” என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது சம்பந்தமாக தமிழ் அறிஞர்கள், ஆன்மீக ஆர்வலர்களை கொண்ட குழுவை அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகம விதிகளின்படி நடத்தக் கோரி கரூரைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா நடக்க உள்ளது. இதற்காக நாங்கள் எங்கள் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவில் உதவி ஆணையரிடம், குடமுழுக்கு நடக்கும்போது தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம் திருவாசகம் ஓதப்பட வேண்டும் என வலியுறுத்தினோம்.

இதற்காக எங்கள் தரப்பில் உதவி ஆணையாளர் மற்றும் கோவில் தரப்பினருக்கு மனு செய்தோம். ஆனால் அவர்கள் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. முற்றிலும் சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு நடத்த உள்ளனர்.

இதனால் பாரம்பரியமிக்க எங்கள் கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம், திருவாசகம், போன்றவைகள் வாசிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் (ஓய்வு), புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தற்போது பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், “உலகிலேயே தமிழ்தான் பழமையான மொழி என்பதற்கு அறிவியல் பூர்வமாகவும் ஏராளமான ஆவணங்களும் ஆதாரங்களும் உள்ளன. குறிப்பாக கொடுமணல், சிவகளை, கீழடி மற்றும் அழகன்குளம் ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் இதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன.

பானைகளில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துகள் கிறிஸ்து பிறப்புக்கு 450 ஆண்டுகளுக்கு முந்தையது. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் தமிழ் கல்வெட்டுகளே அதிக அளவில் கிடைத்துள்ளன. இவை மற்ற மொழிகளை விட பழமையானவை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் முறையாக பாதுகாக்கப்படாததால் ஏராளமான கல்வெட்டுகள் சேதமடைந்துள்ளன.

தெய்வங்கள் உள்ளூர் மொழிகளை புரிந்துகொள்ளாது என்று கூறமுடியாது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஏராளமான பக்தி இலக்கியங்களை படைத்துள்ளனர். அப்பர் சுந்தரர் சம்பந்தர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பக்தி இயக்கங்களை தமிழ்நாட்டில் வளர்த்துள்ளனர். இவர்கள் தமிழில் ஏராளமான பாடல்களை சிவனைப் போற்றி பாடியுள்ளனர். மன்னர்களின் ஆட்சி காலத்தில் 12 நாயன்மார்களும் ஏராளமான சிவாலயங்களை கட்டியுள்ளனர். 12 ஆழ்வார்களால் பெருமாளுக்கு 108 திவ்யதேசங்கள் அருளப்பட்டன.

மனுதாரர் சம்பந்தப்பட்ட கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோரியுள்ளார். அந்த கோயிலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கோயில்களுக்கும் இது பொருந்தும். நாயன்மார்கள் ஆழ்வார்கள் அருணகிரிநாதர், பட்டினத்தார் மற்றும் சித்தர்கள் பலரால் இயற்றப்பட்ட பழமையான துதிப்பாடல்களை கண்டறிந்து தொழுதிடும் வகையில் தமிழ் அறிஞர்கள் ஆன்மீக ஆர்வலர்களை கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

இக்குழு நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தேவையான அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும். கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கான முடிவை அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்கான குழு அவ்வப்போது மாற்றியமைக்கப்பட வேண்டும். பழமையான தமிழ் துதிப்பாடல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் அவற்றையும் சேர்த்து குடமுழுக்கு விழாவின் போது பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

+++++++++++++++++++++++++++++