மீஞ்சூர்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.

இதில் 2-வது யூனிட்டில் இரண்டாவது அலகில் உள்ள ஜெனரேட்டர் செயல்பட்டு டிரான்ஸ்பார்மருக்கு மின் கடத்தப்பட்டு தேவையான அளவிற்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

சற்று நேரம் முன்பு ஜெனரேட்டரின் டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  தகவல் அறிந்த அனல் மின் நிலையத்தில் உள்ள தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைப் போராடி அணைத்து வருகின்றனர்.

இந்த தீ விபத்தால் 2-வது யூனிட் இரண்டாவது அலகுகளில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதைச் சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.