சென்னை

புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் சென்னை ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை, தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது.. இந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதில் நேற்று முன்தினம் காலை 8 மணியில் இருந்து நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 11 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது. இதைப்போல் புழலில் 10 மி.மீ., செம்பரம்பாக்கத்தில் 5.2 மி.மீ. மழை பதிவானது.

தாமரைப்பாக்கம் 12 மி.மீ., கொரட்டூர் அணைக்கட்டு 5 மி.மீ. மற்றும் நுங்கம்பாக்கம் 11.3 மி.மீ., மீனம்பாக்கம் 12.2 மி.மீ. என்ற அளவில் மழைப் பதிவாகி உள்ளது.  மேலும் பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் 260 கன அடியும், மழை நீராக 270 கன அடி உள்பட 530 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருக்கிறது.

பூண்டி ஏரி 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி (3.3) டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. இங்கு விநாடிக்கு 530 கன அடி நீர் வரத்து மூலம், ஏரியின் கொள்ளளவு 2,201 மில்லியன் கன அடி (2.2 டி.எம்.சி.) ஆக நீர் மட்டம் உயர்ந்து உள்ளது. மேலும் 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிக்கு 22 கன அடி நீர் வரத்து மூலம், ஏரியின் கொள்ளளவு 126 மில்லியன் கன அடியாக இருந்து வருகிறது.

அதைப்போல் 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி (3.3 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட புழல் ஏரிக்கு 96 கன அடி வீதம் நீர்வரத்து மூலம் ஏரியின் கொள்ளளவு 1,861 மில்லியன் கன அடி (1.8 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. 500 மில்லியன் கன அடி (அரை டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 15 கன அடி நீர் வரத்து மூலம் 343 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. குடிநீர்த் தேவைக்காக 15 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

தவிர 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி (3.6 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு 114 கன அடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் 2 ஆயிரத்து 700 மில்லியன் கன அடி (2.7 டி.எம்.சி.) இருப்பு இருக்கும் நிலையில், குடிநீர் தேவைக்காக 149 கன அடி நீர் வீதம் திறக்கப்படுகிறது.

இதைப் போல் 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் எரியில் இருப்பு 935 மில்லியன் கன அடி இருக்கும் நிலையில், குடிநீர்த் தேவைக்காக 124 கன அடி நீர் திறக்கப்படுகிறது.