சென்னை:
உச்சநீதி மன்ற தீர்ப்புபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்தியஅரசுக்கு எதிராக தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசன், உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வீடியோ செய்தியில்….
ஐயா வணக்கம்.
நான் கமலஹாசன். இந்திய குடிமகன். இது மாண்புமிகு பாரத பிரதமருக்கு நான் அனுப்பி தரும் ஒரு திறந்த வீடியோ.
தமிழகத்தில், நிலவும் இந்த நிலை தாங்கள்அறியாதது அல்ல. தமிழக மக்கள் நீதிக்காக போராடுகிறார்கள். நீதி வழங்கப்பட்டாலும் அதை செயல்படுத்த வேண்டியது உங்கள் கடமை.
பாமரர்களும், பண்டிதர்களும் இந்த கால தாமதம் கர்நாடக தேர்தலுக்காத்தான் என நம்பத் தொடங்கி விட்டார்கள். அது ஆபத்தானது. அவமானமானதும்கூட. இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.
தமிழர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும், விவசாய மக்களுக்கு நீதி கிடைக்க நீங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும். இது உங்கள் கடமை. நினைவுறுத்த வேண்டியது எனது உரிமை.
இங்கே இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை கடிதம் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
தயவு செய்து செயல்படுத்துங்கள். இந்த நிலை மாற வழி செய்யுங்கள். வணக்கம் வாழ்க இந்தியா.
இவ்வாறு கமல் தனது வீடியோ செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கமல் வீடியோ செய்தி