டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான நச்சுக்காற்று காரணமாக அந்தப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டனர். இதனால், ஆலையை மூடக்கோரி போராட்டம் 2018ம் ஆண்டு நடைபெற்றது. இந்த போராட்டத்தின் 100வது நாள் அன்று பிரமாண்டமாக  நடைபெற்ற பேரணி, வன்முறையாக மாறியது. இதனால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி தமிழ்நாடு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளன.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையை  நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த  வழழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்து வரும் உச்சநீதிமன்றமும்,   ஆலையை தற்காலிகமாக திறக்கவோ அல்லது பராமரிக்கவோ அனுமதி வழங்க மறுத்தது.  ஆனால் கொரோனா காலகட்டத்தில் , நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள தற்காலிகமாக அனுமதி வழங்கியது. அதன்பிறகு ஆலை மீண்டும் மூடப்பட்டது.

இந்த நிலையில் ஆலை நிர்வாகத்தில் பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும், ஜிப்சம் உள்ளிட்ட பொருட்களை எடுக்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு,  ஏற்கெனவே தமிழக அரசின் உயர்மட்டக்குழு அனுமதி வழங்கியுள்ளபடி கழிவுகளை மட்டும் வேதாந்தா நிறுவனம் அதன் சொந்த செலவில் அகற்ற அனுமதிக்கப்படும். அரசு அனுமதிக்காத வேறு எந்த பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என உத்தரவிட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழக அரசு தரப்பில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் 25 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், “வேதாந்தா நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படையான விதிமுறைகளைகூட வேதாந்தா நிறுவனம் பின்பற்றியது இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் அனுமதிக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க | சந்திரயான் 3: நிலவின் புதிய படங்கள் வெளியீடு! மேலும், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.