சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பொன்.மணி பாஸ்கர் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அதிமுக 8 இடங்களில் வென்றுள்ளது. திமுக கூட்டணியில் திமுக 5, காங்கிரஸ் 2 இடங்களில் வென்றிருக்கிறது. இந்திய ஜனநாயக கட்சி ஒரு இடத்தில் வென்றுள்ளது. ஆகையால் அதிமுக, திமுக கூட்டணி சமபலத்தில் உள்ளன.

ஜனவரி 11, ஜனவரி 30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணிக்க, பெரும்பான்மை இல்லாமல் தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன.

தொடர்ந்து கொரோனா எதிரொலியாக மேலும் 6 மாதங்கள் தேர்தல் தள்ளி போனது. இதையடுத்து திமுகவினர் தேர்தலை நடத்த வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து டிசம்பர் 4ம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால் முதலமைச்சர் வருகையால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

4 முறை ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான மதுசூதனன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவில் இருவரும் சமமாக தலா 8 வாக்குகளை பெற்றனர். இதையடுத்து, குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்ய  ஆட்சியர் முடிவு செய்தார். அதன்படி குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றார்.