டெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை  குறித்து பிரதமர் மோடி விமர்சித்து வரும் நிலையில், இதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பி உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதில் என்ன தவறு இருக்கிறது என்பதைக் காட்டுங்களள் என கூறியதுடன்,  இதுகுறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டு  சவால் விடுத்துள்ளார்.

18வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதன்படி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கனவே முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவு வரும் 26ந்தேதி நடைபெற உள்ளது.  அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு & காஷ்மீர்  உள்பட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கிடையில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றன.  அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஏப்ரல் 4 ந்தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.  கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். விழாவில் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘நியாய பத்ரா’ (நீதிக்கான ஆவணம்) என்ற பெயரில்  வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில்,  ‘வர்க், வெல்த், வெல்ஃபேர்’ (work, wealth, welfare) என்பதுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முழக்கம் என்று தெரிவித்ததுடன்,  இளைஞர்கள் குறிப்பாக பெண்களைக் கவரும் வகையிலான பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டது.  மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு ஆண்டு ரூ.1 லட்சம்  நிவாரணம், வழங்கப்படும். 2025ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு, இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும், ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும், ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும், பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதை தவிர்க்க ஒரே வேலை, ஒரே ஊதியம் திட்டம் அமல்படுத்தப்படும், கட்சி தாவினால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் தானாகவே பறிபோகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும், மக்களின் உணவு, உடை, காதல் திருமணம் மற்றும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயணம் செய்து வசிப்பது போன்ற தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடமாட்டோம், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நியாயமற்ற முறையில் தலையிடும் அனைத்து சட்டங்களும் விதிகளும் ரத்து செய்யப்படும்., தேசிய அளவில் குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.400 ஆக நிர்ணயிக்கப்படும், பிஎம் கேர்ஸ் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் விசாரணை செய்யப்படும், 21 வயதுக்கு கீழ் உள்ள திறமையுள்ள வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும்., மாணவர்களின் கல்விக்கடன் ரத்து,  வெறுப்பு பேச்சு, மதமோதல்கள், வெறுப்பு குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை என பல அறிவிப்புகள் மட்டுமின்றி, சிறுபான்மையினரை கவரும் வகையில்,  இஸ்லாமியர்களுக்கு பல சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக பாஜகவினர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி,  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் லீக் சிந்தனைகள் இருப்பதாகவும், இந்தியாவை 100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்வதே காங்கிரஸ் நோக்கம் என்று சாடி வருகிறார் மேலும்,  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் ஒவ்வொரு பக்கமும் இந்தியாவைத் துண்டாட முயல்கிறது என்று  ராஜஸ்தானின் அஜ்மீரில் இன்று நடந்த பாஜக பேரணியில்  பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது, “காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கை என்ற பெயரில் பொய் மூட்டை ஒன்றை அவிழ்த்து விட்டு இருக்கிறது. அதில் ஒவ்வொரு பக்கத்திலும் இந்தியாவைத் துண்டாக்கும் முயற்சிகள் தெரிகிறது. இது சுதந்திரத்திற்கு முன் முஸ்லிம் லீக் கொண்டிருந்த எண்ணங்களைப் பிரதிபலிக் கிறது.

முஸ்லிம் லீக்கை திணிக்கவே காங்கிரஸ் விரும்புகிறது. இன்றைய இந்தியாவில் அன்றைய முஸ்லீம் லிங் சிந்தனைகளைத் திணிக்க முயல்கிறது.  இதைத் தவிர்த்துப் பார்க்கும் போது அந்தத் தேர்தல் அறிக்கையில் எஞ்சியிருப்பது கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி சிந்தனைகள் மட்டுமே.

 ”நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் கூறினார்கள். இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் பறிபோகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. அவர்கள் ஆட்சி யில் இருந்தபோது தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். அதிக குழந்தை பெற்றவர்களுக்கும் ஊடுருவல்காரர்களுக்கும் செல்வத்தைப் பகிர்ந்து அளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தரப் போகிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.

மேலும்,  இன்றைய காங்கிரஸ் கொள்கைகள் இல்லாமல் தடுமாறுகிறது. அக்கட்சி எல்லாவற்றையும் அவுட்சோர்சிங் செய்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதுபோன்ற கட்சியால் நாட்டின் நலன் கருதி எதையும் செய்ய முடியாது. அவர்கள் இந்தியாவைக் கடந்த நூற்றாண்டிற்குத் தள்ள விரும்புகிறார்கள் என்பது அவர்கள் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது.

பெண்கள் சக்தி பற்றி காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்படவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு பெண்கள் பல தலைமுறைகளாகப் பாதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்குக் காங்கிரஸ் என்ன செய்தார்கள். இப்படி உங்களுக்கு உதவாத காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.  “கமிஷனுக்காக உருவானது தான் இந்தியா கூட்டணி.. ஆனா நாங்க அப்படி இல்லை” என்று சாடியிருந்தார்.

பிரதமர் மோடிக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும்,  தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.  காங்கிரஸ் அறிக்கை குறித்து விளக்கி, அதில் என்ன தவறு இருக்கிறது என்பதைக் காட்ட நரேந்திர மோடியிடம் நேரம் கேட்டுள்ளார். இதுகுறித்து விவாதிக்க தயாரா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

சவாலை ஏற்றுக்கொள்வாரா மோடி?

தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்! மோடியின் பேச்சுக்கு பிடிஆர் கண்டனம்…

விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கடன், பெண்களுக்கு ரூ.10ஆயிரம், சாதிவாரி கணக்கெடுப்பு: ராஜஸ்தானில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு…