விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனையை  விழுபுரம் நீதிமன்றம் மீண்டும்  உறுதி செய்ததுடன், அவர் மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் வழங்கி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது,  முதலமைச்சராக  எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வந்த சிறப்பு டிஜிபி ராஜேஸ்தான்,  வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது  பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அந்த அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், வழக்கு நடைபெற்று, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.20,500 அபராதம், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு  ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். பலமுறை கால அவகாசம் அளித்தும் தொடர்ந்து வாதாட மறுத்து வந்த நிலையில், நீதிமன்ற எச்சரிக்கைக்கு பின்னர் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் 5 நாட்கள் வாதாடி தனது வாதத்தை நிறைவு செய்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் கடந்த 2024, பிப்ரவரி  9ம் தேதி இறுதி வாதத்தை முன் வைத்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி  9ம் தேதியோடு நிறைவு பெற்றதை அடுத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா இன்று தீர்ப்பு வழங்கினார்.

அதில், பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு கீழமை நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராஜேஷ் தாஸ்க்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.