சென்னை

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.  அமைச்சரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுவரை செந்தில் பாலாஜிக்கு இதுவரை 13 முறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி முதன்மை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்.

அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 11 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அதாவது செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி 3-வது முறையாகத் தாக்கல் செய்த மனு வரும் திங்கள் கிழமை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்கெனவே 2 முறை செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும்  செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என அறிவுறுத்தியிருந்தது.

கடந்த 203 நாட்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்  நீதிமன்றம் வரும் 8 ஆம் தேதிக்கு இந்த மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.