திருச்சி: புதுச்சேரியை பின்பற்றி தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால், பள்ளிகளை திறக்க பெற்றோர்களும், தனியார் பள்ளிகளும் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையில், புதுச்சேரி மாநிலத்தில் வரும் 16-ம் தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதேபோல் அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி அண்மையில் அறிவித்தார். இதனால் தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியளார்களை சந்திதார். அப்போது அவர் கூறியதாவது,

புதுச்சேரியைப் போலவே தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து  அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். நாமும் ஏன் பள்ளிகளைத் திறக்கக் கூடாது என்ற வகையில்தான் ஆலோசனை இருந்தது. புதுச்சேரி என்ன முடிவு எடுத்திருக்கிறதோ அதை அடிப்படை யாகக் கொண்டு, துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனைகளை முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்வோம்.  முதல்வர் என்ன வழி வகைகளைத் தெரிவிக்கிறாரோ, அவற்றைப் பின்பற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.