சென்னை: நடிகர் விஜய் இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு பல்வேறு அறிவுறுரைகளை கூறியதுடன்,  ரூ 1 லட்சம் அபராதம் விதித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டது. ஆனால், விஜய், அதை செலுத்த மறுத்ததால், அவரது காரை வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியவில்லை.

இதைத்தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, நடிகர் விஜய் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுமீதான விசாரணை, நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் முன்னிலையில் நடைபெற்றது.

விசாரணையைத் தொடர்ந்து, வழக்கு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்வும் குறிப்பிட்ட நீதிபதி, வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்று‘ காட்டமாக தெரிவித்தார்.

மக்கள் செலுத்தக்கூடிய வரி தான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறியவர்,  தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில்,அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், வரிஏய்ப்பு என்பது தேசத் துரோகம் எனவும் குறிப்பிட்ட நீதிபதி, இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை 2வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டார். மேலும், நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி1  லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு  வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதியின் அதிரடி தீர்ப்பு விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.