சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், பச்சிளங் குழந்தைகளுக்கான 3வகையிலான விலையில்லா  சத்துமாவு பாக்கெட்டுகள்  வழங்கும் திட்டம் மார்ச் 1ந்தேதி தொடங்கி வைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  2 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்திய தர நிர்ணயக் கழகத்தின் முத்திரையுடன் குழந்தைகளுக்கான சத்துமாவு வழங்கப்பட இருக்கிறது. மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பு அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைப் போக்க தமிழக அரசு, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் அங்கன்வாடி மையங்கள் வாயிலாக இணை உணவாக சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.  தற்போது, 2 கிலோ எடை கொண்ட இந்த சத்துமாவு பாக்கெட்டுகள் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இதேபோல, 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்து நிலையை முன்னேற்ற ‘பிரதமரின் ஊட்டச்சத்து ஒருங்கிணைப்புத் திட்டம்’ மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

 இந்த நிலையில், தமிழகத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கண்டறிய தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி, 2022-ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள 38 லட்சம் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், மாநிலம் முழுவதும் 9.3 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, 2022-ம் ஆண்டு மே 7-ந்தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, மே 21-ந்தேதி நீலகிரியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதேபோல, அங்கன்வாடி மையங்கள் மூலம் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மாற்றங்களை தமிழக அரசு செய்துள்ளது.

அதன்படி, இந்திய தர நிர்ணயக் கழகத்தின் முத்திரையுடன் கூடுதல் சுவை, புரதச்சத்து விகிதத்தை அதிகரித்து வெள்ளை, நீலம், இளஞ்சிவப்பு ஆகிய 3 வண்ணங்களில் மாவு பாக்கெட்டுகள் வகை பிரித்து வழங்கப்பட உள்ளது.

இதில், வெள்ளை நிற பாக்கெட்டுகள் 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும்,

இளஞ்சிவப்பு நிற பாக்கெட் 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும்,

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நீல நிற பாக்கெட்டுகளும் வழங்கப்பட உள்ளது.

இந்த புதிய சத்துமாவு பாக்கெட்டுகள் மார்ச் 1-ந்தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டசார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  புதிய சத்துமாவு பாக்கெட் வழங்கும் திட்டத்தில் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்திய தர நிர்ணயக் கழகத்தின் முத்திரையுடன் (பி.ஐ.எஸ்.) குழந்தைகளுக்கான சத்துமாவு வழங்கப்பட இருக்கிறது.

2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ‘வெனிலா’, ‘சாக்லேட்’, ‘ஸ்டாபெர்ரி’ போன்ற சுவை உடைய சத்துமாவு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் குழந்தைகள் ஆர்வமுடன் சத்துமாவு சாப்பிடுவார்கள். இதேபோல, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஒரே வகையிலான மாவு பாக்கெட்டுகள் வழங்கப்படும்.

இவர்களுக்கான சத்துமாவில் இனிப்பு சதவீதத்தை குறைத்து புரத சத்துக்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சத்துமாவுக்கும், புதிதாக வழங்கப்பட உள்ள சத்துமாவுக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது.

இந்திய தர நிர்ணயக் கழகத்தின் முத்திரையுடன் சத்துமாவு வழங்கப்படவேண்டும் என்பதால் கூடுதலாக சிலவற்றை இணைத்துள்ளோம். முன்பு அனைவருக்கும் 2 கிலோ அளவுடைய பாக்கெட் மாவுகள் வழங்கப்படும்.

இப்போது, 2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு 2 கிலோ பாக்கெட்டு வழங்கப்படும். 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், பாலூட்டும் மற்றும் கர்ப்பினி தாய்மார்களுக்கு 500 கிராம் பாக்கெட்டுகள் வழங்கப்படும். அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் புதிய சத்துமாவு பாக்கெட்டுகள் அனுப்பும் பணி தொடங்கிவிட்டது.

இந்த திட்டத்தை மார்ச் 1-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.