பருத்திவீரன் படவிவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் மீது சேற்றை வாரி வீசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா-வுக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தான் பேசிய சொற்கள் அமீர் மனதை காயப்படுத்தி இருந்தால் தான் மன்னிப்பு கேட்பதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டார் ஞானவேல்ராஜா. இருந்தபோதும் மழை விட்டும் தூவானம் விடாத குறையாக அவருக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

“திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம் ?” என்று இயக்குனர் சசிகுமார் கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும், போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் சமுத்திரக்கனி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “வருத்தம் தெரிவிக்கும் சீன் எல்லாம் இங்க செல்லாது.

நீங்க செய்ய வேண்டியது.

எந்த பொதுவெளியில எகத்தாளமா உக்காந்து கிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ… அதே பொது வெளியில பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும்..!

நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூ-வை சமூக வலைதளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்…!

அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா… கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு…

அப்புறம் “பருத்திவீரன்” திரைப்படத்தில வேலை பார்த்த நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம்…அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேல பாத்தவங்க” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.