சென்னை: தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலம் ரூ.97.01 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலம் 97 கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூரில் இயல்புநிலை தேங்காய் எண்ணெய் மற்றும் தேங்காய் பவுடர் தயாரிக்கும் கூடம், தலா 500 மெ.டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள், தரம் பிரிப்பு மற்றும் சிப்பம் கட்டும் கூடம், பரிவர்த்தனை கூடம், மரச்செக்கு கூடம், கடைகள், சிற்றுண்டி கூடம், அலுவலகக் கட்டடம், உலர்களங்கள், எடை மேடை மற்றும் தொழிலாளர் ஓய்வு அறை முதலான கட்டுமானங்களை உள்ளடக்கி 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தென்னை மதிப்புகூட்டு மையம்.

தருமபுரி மாவட்டம் – பாப்பாரப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் – வேடச்சந்தூர் மற்றும் கவுஞ்சி, தேனி மாவட்டம் – கெங்குவார்பட்டி ஆகிய இடங்களில் ரூ.39.43 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2000 மெ.டன் குளிர்பதன கிடங்கு, தரம்பிரிப்பு மற்றும் சிப்பம் கட்டும் கூடம், தர நிர்ணயம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அறை, 1000 மெ.டன் மற்றும் 500 மெ.டன் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இயந்திரங்களுடன் கூடிய முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ரூ.20.20 கோடி மதிப்பீட்டில் 2.50 லட்சம் மலர் தண்டுகளுக்கான குளிர்பதன கிடங்கு, ஏல மையம், தரம் பிரிப்பு கூடம், வணிகர் கூடம், கடைகள், கூட்ட அரங்கம், பயிற்சி அரங்கம், விநியோகக்கூடம், 2000 மெ.டன் சேமிப்பு கிடங்கு முதலான கட்டுமான பணிகளை மலர் வளர்க்கும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காகவும் ஏற்றுமதியினை ஊக்கப்படுத்தும் வகையிலும் மலர்களுக்கான பன்னாட்டு ஏலமையம்.

தென்காசி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டுமானங்களை மேம்படுத்தி தரம் உயர்த்துதல் திட்டத்தின் மூலம் ரூ.6.38 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2000 மெ.டன் கிடங்கு, அலுவலகக் கட்டடம், உலர்களம் மற்றும் விவசாய ஓய்வு அறை.

தென்காசி மாவட்டம் தென்காசியில் வேளாண்மை பொறியியல் துறையால் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையக் கட்டடம்.

திருத்துறைப்பூண்டி, பூந்தோட்டம் மன்னார்குடி மற்றும் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.14.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5000 மெ.டன், 2000 மெ.டன், 1000 மெ.டன் மற்றும் 500 மெ.டன் கொள்ளளவு கொண்ட ஊரக சேமிப்பு கிடங்குகள் திறந்து வைக்கப்பட்டன.

மேலும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்காகவும், வணிக விரிவாக்கம் உற்பத்தி முதலீட்டிற்காகவும் மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும் ரூ.12.68 கோடி மதிப்பீட்டில் 110 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு மற்றும் தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் நிதி வழங்கிடும் விதமாக, முதலமைச்சர் 5 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குநர்களுக்கு நிதிக்கான காசோலைகளை வழங்கினார்.