சென்னை: சென்னை ஓட்டேரி பட்டாளம் சந்திப்பில், விற்பனை செய்யப்பட்ட பின்னிமில் இடம் தொடர்பாக ரூ.50கோடி பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக   தனியார் கட்டுமான நிறுவனம் மீதான அமலாக்கத் துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான, ஓசேன் லைஃப் ஸ்பேஷஸ் (OCEAN LIFE SPACES) நிறுவனத்தை எஸ்.கே பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடங்கினர்.  பின்னர், இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், நிறுவனத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை ஸ்ரீராம், எஸ்.கே பீட்டரிடம் கேட்டதாகவும் இதற்கு எஸ்.கே பீட்டர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து எஸ்.கே. பீட்டர் மீது, ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.கே.பீட்டர் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் 6 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இந்த விவகாரத்தில் சுமார் 50 கோடி வரை பணபரிமாற்றம் நடத்ததாக புகார் எழுந்த நிலையில், இதை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதா என அமலாக்கத் துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவன அதிபர் எஸ் கே பீட்டர் நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை மேற்கொண்டிருந்தனர்.

இதனடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை ஆவணங்களுடன் ஆஜராகுமாறு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பீட்டருக்கும் சம்மன் அனுப்பியது.

இதனை எதிர்த்து பீட்டர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இருவருக்கும் இடையேயான தொழில் பிரச்சினையில் தலையிட்டு அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது தவறு. மேலும், தன் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் சட்ட விரோதப் பணப்பரிமாற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்தது செல்லாது. எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அமலாக்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.