சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் ஓபிஎஸ் தரப்பினரால் சூறையாடப்பட்ட வழக்கில், எடப்பாடி தரப்பின் புகார் மீது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  சிபிசிஐடி அதிகாரிகள் நேரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜூன் 11ந்தேதி எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக, ஓபிஎஸ் தரப்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத் திற்குள் புகுந்து காவல்துறையினர் முன்னிலையில் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது பூட்டப்பட்டிருந்த அறைகளின் கதவுகளை உடைத்து, ஆவணங்களை அள்ளிச்சென்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகின. இந்த சம்பவங்கள் நடைபெற்றபோது, அங்கிருந்த காவல்துறையினர் அதை தடுக்க முன்வரவில்லை. ஆனால், ஓபிஎஸ் சென்றதும், அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதுகுறித்து எடப்பாடி ஆதரவு அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினர் முறையாக விசாரணை தொடங்காத நிலையில், நீதிமன்றத்தை நாடினார். அதைதொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் காவல்துறை  குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.

இன்று, இந்த குழுவினர், அதிமுக தலைமை அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினர். சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து, அங்கு கதவுகள் உடைக்கப்பட்டது, ஆவணங்கள் சூறையாடப்பட்டிருந்த காட்சிகளை கண்டு, விசாரணை நடத்தினர்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு..! ஆவணங்களை அள்ளிச்சென்றார் ஓபிஎஸ்…

அதிமுக அலுவலக மோதல்: சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம்!