சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் முன்பு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுகவின்  உள்அரங்கம் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக உள்அரங்கத்தில் இருந்து கட்சியின் அனைத்து ஆவணங்களையும் ஓபிஎஸ் தனது காரில் ஏற்றினார். இதையடுத்து, அந்த அரங்கம் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து, அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட  ஓபிஎஸ்  அங்கிருந்து புறப்பட்டார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் அவரது ஆதரவாளர் களுடன் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அங்கு, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், போலீசார் தடியடி நடத்தினர். அதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் உள்ள ராயப்பேட்டை பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் தலைமை அலுவலகம் சென்ற ஓபிஎஸ், அங்கிருந்த கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தனது ஆதரவாளர்கள் கொண்டு, அள்ளிச்சென்று, தனது வாகனத்தில் ஏற்றினார்.  தொடர்ந்து தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். வருவாய் துறையை சேர்ந்த வருவாய்கோட்டாட்சியர் ஓபிஎஸ் இடம் சீல் வைப்பதற்கான நோட்டீசை வழங்கிய பின்னர் தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது; இந்த நடைமுறை 145 குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவின் அடிப்படை ஆகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுக உள் அரங்கம் சீல் வைக்கப்பட்டதை அடுத்து, அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட  ஓபிஎஸ் தற்போது அங்கிருந்து புறப்பட்டார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வான சிலமணி நேரத்தில் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப் பட்டுள்ள சம்பவம் திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நோக்கம் என்று விமர்சனம் எழுந்துள்ளது.