சென்னை: அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி தரப்பில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி தலைமையில் சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த நேரத்தில் ராயப்போட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன்  வந்த ஓபிஎஸ், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இபிஎஸ் ஆதரவாளர்களை அடித்து துரத்திவிட்டு, பூட்டப்பட்டிருந்த அறைகளை கடப்பாறை கொண்டு உடைத்து திறந்து, அங்கிருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியானது.

இந்த மோதலில் . 2 போலீஸார் உட்பட 47 பேர் காயம் அடைந்தனர். காவல்துறையைச் சேர்ந்த 4 வாகனம் உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அலுவலகத்தில் இருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காத நிலையில், உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வழக்குகளை  சிபிசிஐடிக்கு மாற்றி தமிழகஅரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மோதல்  வழக்கின் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான குழுவில் லதா, ரம்யா, ரேணுகா, செல்வின் சாந்தகுமார் ஆகிய 4 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக்குழு விரைவில் தனது விசாரணையை விரைவில்  தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.