வேலூர்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள முருகனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டோர் வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் முருகனும் ஒருவர் ஆவார்.  இவர் கடந்த சில வாரங்களாக பல்வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறாப்ப்டுகிறது.

அவருக்குச் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  அவர் தமக்கு வலி குறையவில்லை எனத் தெரிவித்து தமக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று ஜனவரி மாதம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மீண்டும் அவருக்குப் பல்வலி ஏற்பட்டதால் இன்று காலை 10 மணிக்கு முருகன் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அவருக்கு அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.