சென்னை:

கர்நாடகாவின் தூதர் ரஜினி என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை அறவழியில் போராட்டம் நடத்தியது. ஆனால், நம் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, நம்மீது கத்தி வைத்துப் பதம் பார்க்க நினைக்கும் வகையில் ரஜினியின் டுவிட்டர் பேச்சு உள்ளது. .

தமிழர்கள் எல்லாம் சேர்ந்து விட்டார்கள், என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும், பேச்சு இது. தங்களுடைய திரைப்படம் வெளியாகும் போது மட்டும் பூச்சாண்டி காட்டும் உங்களைப் போன்ற ஒரு நடிகனைத் தமிழ்த்திரை உலகம் இதுவரை சந்தித்ததே இல்லை.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?. இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த போது குரல் கொடுத்தீர்களா? நியூட்ரினோவுக்கு எதிராகக் களத்தில் இறங்கிப் போராடுனீர்களா?. ஒரு அறிக்கையாவது விட்டீர்களா? மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில், ‘‘எதற்கும் வாய் திறக்காத நீங்கள், இன்று காவிரிக்காக ஒன்று கூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வன்முறைக் கலாச்சாரம் ‘இதை ஆரம்பத்திலே கிள்ளியெறிய வேண்டும் என்கிறீர்களே’. ஓ! இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது, நீங்கள் தமிழன் அல்லாத கர்நாடக்காவியின் தூதுவர் என்று!

தமிழ்நாட்டிலேயே இருந்துக் கொண்டு, தமிழனிடம் உறிஞ்சிய ரத்தத்தில், ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு, எங்களையே வன்முறையாளர்கள் என்று சுமத்துகிறீர்கள். சீருடையில் இருந்தவரும் எங்கள் தமிழன் தான். எங்கோ, கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன் அல்லது இந்த நிகழ்ச்சியைக் கறைப்படுத்த நினைத்த ஒருவன், செய்த செயலுக்கு வருந்துகிறோம்.

பேசும் போது, எதைப்பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேசுங்கள். இல்லையென்றால் தமிழ் மக்களால் ஓரங்கட்டப்படுவீர்கள். அந்த நாளும் வெகுதூரத்தில் இல்லை’’ என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.