சென்னை:

வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது. மேலும்,  காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  தொடங்கிய நிலையில், சில நாட்கள் நல்ல மழை பெய்தது. அதன்பிறகு, மழையை காணவில்லை. இந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மண்டல வானிலை மையம், வெப்பசலனம் மற்றும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தேனி, ராமநாதபுரம், நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.