தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்ததை அடுத்து, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் முதன்முதலாக கேப்டன் பதவி ஏற்ற விராட் கோலி, 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் தோனி கேப்டன் பதவியில் விலகியதை தொடர்ந்து முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

“7 வருடங்கள் ஒவ்வொரு நாளும் அணியை சரியான திசையில் கொண்டு செல்வதற்காக கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியுடன் எதையும் எளிதாக கடந்து விடாமல் நேர்மையாக செயல்பட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இப்போது இந்திய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய நேரம். எனது பயணத்தில் பல ஏற்றங்கள் மற்றும் சில தாழ்வுகள் உள்ளன, ஆனால் ஒருபோதும் முயற்சியின்மை அல்லது நம்பிக்கையின்மை இருந்ததில்லை” என்று விராட் கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அன்பைப் பெற்ற விராட் கோலியின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் துணை நிற்பார்கள். உங்களது வேறு இன்னிங்ஸ் வெற்றி பெற வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.