சென்னை: உ.பி.யில் விவசாயிகளை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து,உ.பி. மாநலி பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், இன்று சென்னை உள்பட தமிழகதின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தரபிரதேச மாநிலத்தில், மாநில துணைமுதல்வரை கண்டித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது, மத்திய அமைச்சர் மகனின் காரை வழிபறித்தபோது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, அந்த கார் மோதி  4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மாநில அரசின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரியங்கா கைதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவர் செல்வப் பெருந்தகை, மாநில துணைத் தலைவர் கோபண்ணா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் மத்திய, யோகி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுபோல மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சிவராஜ் சேகரன் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சியின் வட சென்னை மாவட்டத் தலைவர் திரவியம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் குரல்கள் எழுப்பப்பட்டன.

கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியில் வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவர் டில்லி பாபு தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை, “உத்தரப் பிரதேசத்தில் மத்திய அமைச்சர் மகன் காரை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பாக உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தை பார்க்கச் சென்ற பிரியங்கா காந்தி மோசமான வகையில் நடத்தப்பட்டுள்ளார். காவல் துறையினர் அவரைப் பிடித்து தள்ளி மோசமாக நடத்தியுள்ளனர். மோடி அரசு பிரியங்கா காந்தியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய அமைச்சர் மகன் காரை ஏற்றிக் கொலை செய்த விவகாரத்தில் பாஜக அரசு, யோகி ஆதித்யநாத் அரசு யாரைக் காப்பாற்றுவதற்காக ஒன்பது பேரைக் கொன்றுள்ளது” என்றார்.

மேலும்,  உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கிராமம் கிராமமாகச் சென்று பணியாற்றுகிறார். மக்களின் ஆதரவைத் திரட்டுகிறார். அங்கு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வெற்றியை சந்திக்கப் போகும் நிலையில், அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக, இவ்வாறு நடந்துகொள்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரௌலட் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற தாக்குதலைப் போல தற்போது விவசாயிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுகிறது.

பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து மாநிலம் தழுவிய மிகப் பெரிய போராட்டம் நடைபெறும். இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிடுவார்” எனவும் தெரிவித்தார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வதேரா உ.பி.யில் கைது! பரபரப்பு…