சென்னை: ஆழ்வார்பேட்டை செக்மேட் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழந்தனர். இந்த  விபத்துக்கு மெட்ரோ பணிகள் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இதை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்து உள்ளது.

சென்னையின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமகா பல பகுதிகளில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருவதுடன், சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதை மெட்ரோ நிர்வாகம் மறுத்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை  ஆழ்வார்பேட்டை பகுதியில் செய்யப்பட்டு வரும் செக்மேட் என்ற  தனியார் மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் மூன்றுபேர் உயிரிழந்தனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை அருகே இருக்கக்கூடிய சேமியர் சாலையில் செக்மேட் என்ற மதுபான பார் மற்றும் கிளப்புடன் கூடிய பப் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் மதுபான பாரில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் மற்றும் மணிப்பூரை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில்  சம்பவத்தன்று ( மார்ச் 28)  மாலை 7 மணிஅளவில்  திடீரென செக்மேட் கிளப்பின் மேற்கூரை இடிந்து விழுந்தது.  அப்போது அங்கு ஏராளமானோர் இருந்த நிலையில், முதல் தளத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்ததில், உள்ளே 5க்கும் மேற்பட்டோர் சிக்கி கொண்டதாக தகவல் வெளியானது.

தகவலறிந்து இரண்டு தீயணைப்பு வண்டியில் வந்த வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஜேசிபி வாகனங்கள் மூலம் இடிபாடுகள் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மூன்று பேரும் அந்த மதுபான விடுதியில் வேலை செய்தவர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (45) என்பதும், இரண்டு பேர் மணிப்புரைச் சேர்ந்த மேக்ஸ் (21), லாலி( 22) என்பதும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கு மெட்ரோ பணிகள்தான காரணமா அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மெட்ரோ பணிகள் காரணமாக பலரது வீடுகள் அதிர்வதாகவும், சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால்,  இதை  மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்துள்ளது. , “ஆழ்வார்பேட்டை மதுபான விடுதி விபத்துக்கு மெட்ரோ பணிகள் காரணமில்லை. விபத்து நடந்த பகுதியிலிருந்து 240 அடி தொலைவில் தான் பணிகள் நடந்துவருகிறது” இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை  என்று விளக்கமளித்துள்ளது.