சென்னை:  மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட 1749 வேட்புமனுக்களில் 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து,  18-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பை  மார்ச் 16ந்தேதி மாலை  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி,, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து  மார்ச் 19ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிமார்ச்  27-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக நாகையில் 9 வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்..இதையடுத்து, நேற்று  (மார்ச் 28ந்தேதி) வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் 1749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும், அதில் முறையான ஆவணங்கள் இடம்பெறாத  664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. மேலும்,  1085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக நாகையில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30ந்தேதி வும் கடைசி நாள் என்றும் அறிவித்து உள்ளது.. இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.