சேலம்:  பிரதமர் மோடி, 2026 சட்டமன்ற தேர்தல் வரை தமிழகத்திலேயே குடியிருந்தாலும் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க முடியாது என தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கூறினார்.

தமிழ்நாட்டில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திமுக மற்றும் இண்டி கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம். செல்வகணபதியை   ஓமலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது,   ஓமலூர் பஸ் நிலையத்தில் பரப்புரை செய்தபோது உதயநிதி கூறியதாவது,

தமிழகத்திற்கு தேர்தல் வந்தால் மட்டுமே பிரதமர் அடிக்கடி வருகிறார். வரட்டும் நான் எதுவும் சொல்லவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இல்லை, அடுத்த 2026-ல் நடக்கும் சட்டமன்ற தேர்தல் வரையிலும் தமிழகத்திலேயே அவர் குடியிருந்தாலும் ஒரு தொகுதியில்கூட பாஜக ஜெயிக்க முடியாது.

“இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை பார்த்து அண்டை மாநிலமான கர்நாடகா, தெலுங்கனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றான கனடாவில் திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வந்த காலை உணவு திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

2019ஆம் ஆண்டில் எப்படி 39 தொகுதிகளில் ஜெயித்தோமோ அதேபோல், இந்த முறை 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி, எப்போதும் ஏன் செங்கலை காட்டுகிறேன் என்று கேட்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் வரையில் நான் அந்தச் செங்கலை கொடுக்கமாட்டேன். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டிருக்கிறார்.

அவருக்கு பதில் அளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தத் தேர்தலில் யார் பிரதமர் வேட்பாளர் என்பது முக்கியம் இல்லை, யார் பிரதமராக வரக்கூடாது என்பது தான் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியுமா?”

இவ்வாறு பேசினார்.