சென்னை: நெல்லை ரயிலில் ரூ.4 கோடி அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் பொதுமக்களுக்கு வேட்பாளர்கள் தரப்பில் வாக்குக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம்,  சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினல் தாம்பரம் அருகே பறிமுதல் செய்தனர். இந்த பணம் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுடையது என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து நயினார் நாகேந்திரன் உள்பட அவருடைய உறவினர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்த பணம் தன்னுடையது அல்ல என நயினார் நாகேந்திரன் மறுத்து வருகிறார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு தேர்தல் செலவுக்காக கட்டுக்கட்டாக கொண்டுசென்ற ரூ. 4 கோடி பணத்தை ரகசிய தகவலின்படி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்பந்தமாக அவரது ஓட்டல் மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல், உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.நெல்லை மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக இந்த பணம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிமுறைகளை மீறுகின்ற செயலாகும். தேர்தல் ஆணையம் ஒரு மக்களவை தொகுதிக்கு செலவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட தொகையான ரூ. 95 லட்சத்தை விட அதிகமான பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

இந்த அடிப்படையில் நயினார் நாகேந்திரன் மீது உரிய விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்துவதோடு அவர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என்று அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன். ஜனநாயகத்தை பணநாயகத்தின் மூலம் வெற்றிபெற்று விடலாம் என்கிற முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறது.

ஏற்கனவே தேர்தல் பத்திர நன்கொடை மூலம் கார்ப்பரேட்டுகளிடம் நிதியை குவித்த பாஜக, பெரும் நிதியை தேர்தலில் செலவிட திட்டமிட்டிருப்பது ரூ. 4 கோடி சிக்கியது அம்பலப்படுத்தியுள்ளது. இத்தகைய ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடும் பாஜகவுக்கு தமிழக மக்கள் உரிய பாடத்தை தேர்தலில் புகட்டவேண்டும்.

இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்.