சென்னை

வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் தருவோருடன் கூட்டணி வைகக உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

இன்று தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,

”இன்று தே.மு.தி.க. வளர்ச்சி, தேர்தல் நிலைப்பாடு குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.  இனி வேட்பாளர்கள், போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். தே.மு.தி.க. சார்பில் 4 மண்டலங்களிலும் மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

இதுவரை எந்த கட்சியுடனும் தேர்தல் கூட்டணி நேரடியாகவோ மறைமுகமாகவோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்களுக்கு 14 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை இடம் தருவோருடன்தான் கூட்டணி வைப்போம். மேலும் நாங்கள் கேட்கும் இடங்களைத் தரும் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம்.

முந்தைய 2014 மக்களவைத் தேர்தல் போல் தொகுதிகளைப் பங்கீடு செய்யும் கட்சிகளுடன் கூட்டணி. வரும் 12 ஆம் தேதி கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

தேமுதிகவிடம் கொள்கை, சித்தாந்தங்கள் பற்றி கேட்க வேண்டாம். இதுவரை எந்த கட்சிகளும் விஜயகாந்த் அளவுக்கு தங்களது கொள்கைகளை அறிவிக்கவில்லை. தேமுதிக சார்பில் தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

என்று கூறியுள்ளார்.